ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து மக்களவை தேர்தலுக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சரிடம் மத்திய அரசு கூறியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடை காரணமாக, 6 மாதங்களுக்கு மட்டும் ஈரானிடம் எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி அளித்தது. இந்த காலக்கெடு கடந்த மே 2-ஆம் தேதி முடிவடைந்த நிலையிலும், ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
ஆனால், ஈரானிடம் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்வதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா தற்போது இறக்குமதியை குறைத்து வருகிறது. ராய்டர்ஸ் அறிக்கையின்படி கடந்த மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தின் எண்ணெய் இறக்குமதி 31.5 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் மத்திய அரசும் ஈரான் உடனான வர்த்தகத்தை துண்டிக்கும் பட்சத்தில் ஏற்படும் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய,ஆண்டு முழுவதற்கும் 15 மில்லியன் டன் கச்சா எண்ணெய் கூடுதலாக சேகரிக்க, பிற அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், ஈரான் உடனாக எண்ணெய் இறக்குமதியை தொடர்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்த அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீப் டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இது குறித்து, மக்களவை தேர்தலுக்கு பின்னரே முடிவெடுக்கப்படும் என்று சுஷ்மா சுஷ்மா சுவராஞ் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.